ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழாவில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கும் இடையே நடந்த சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. போட்டி முடிந்து அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டிருந்தபோது, விராட் கோலி வேண்டுமென்றே டிராவிஸ் ஹெட்டை தவிர்த்துவிட்டு சென்றது மைதானத்தில் இருந்தவர்களையும், ரசிகர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 256 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில், விராட் கோலி 15 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இருப்பினும், பெங்களூரு அணி 200 ரன்களை கடந்து புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.
போட்டியின் போது, வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, ஸ்லிப் திசையில் நின்றிருந்த டிராவிஸ் ஹெட்டிடம் விராட் கோலி ஏதோ சில வார்த்தைகளைக் கூறியதாகத் தெரிகிறது. குறிப்பாக, 'இம்பாக்ட் சப்' சைகையைக் காட்டி, டிராவிஸ் ஹெட்டை பந்துவீச வருமாறு கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. டிராவிஸ் ஹெட் பெரும்பாலும் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, பீல்டிங்கின் போது மாற்றப்படுவதை சுட்டிக்காட்டியே கோலி இவ்வாறு அவரை சீண்டியதாகக் கருதப்படுகிறது.
இந்த மோதல் போட்டியுடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் முடிந்த பின் வீரர்கள் கைகுலுக்க வரிசையாக வந்தனர். அப்போது, மற்ற ஹைதராபாத் வீரர்களுக்கு கை கொடுத்த விராட் கோலி, தனக்காகக் கையை நீட்டி நின்ற டிராவிஸ் ஹெட்டை மட்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். இதனால் ஒரு நிமிடம் திகைத்துப் போன டிராவிஸ் ஹெட், அமைதியாக நகர்ந்து சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், பெங்களூரு அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளும் தலா 18 புள்ளிகளுடன் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நேரடியாக முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.