சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல் தொடரின் தனது கடைசி ஹோம் மேட்ச் ஆட்டத்தை இன்று சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தல தோனி விளையாடுவாரா, தனது ஓய்வை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய் இந்தப் போட்டியை நேரில் காண வரவுள்ளதாக வெளியான தகவல், இந்த பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.
'சென்னை மண்ணில் தான் எனது கடைசி போட்டி இருக்கும்' என்று தோனி முன்பு கூறியிருந்தார். அதன்படி, இந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இது என்பதால், தோனி நிச்சயம் களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமூக வலைதளங்களில், இன்றைய போட்டியுடன் அவர் தனது ஓய்வை அறிவிக்கலாம் என்றும் செய்திகள் உலா வருகின்றன. இதையொட்டி, மைதானம் முழுவதும் மஞ்சள் நிற அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
முதல்வர் விஜய்யும், அவரது அமைச்சரவை சகாக்களும் தோனியின் கடைசி ஆட்டத்தைக் காண சேப்பாக்கம் வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, மைதானத்தில் உள்ள விஐபி அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தோனி விளையாடுவது உறுதியானால் மட்டுமே முதல்வர் மைதானத்திற்கு வருவார் என்றும், அவர் விளையாடாவிட்டால் முதல்வரின் வருகை ரத்து செய்யப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். தற்போது, கடந்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தோனி தனது ஓய்வுக்காக விளையாடினால் அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தோனி, அணியின் நலன் கருதி விளையாடாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.
இன்று மாலை டாஸ் போடும்போது தான் தோனி விளையாடுகிறாரா? முதல்வர் விஜய் வருகிறாரா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். இதனால், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.