சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்த உணவகங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிய சமையல் உபகரணங்களை உடனடியாக வாங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
தற்போது, சென்னை மாநகராட்சியில் மட்டும் 383 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. மேலும், மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சேர்த்து 237 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக, இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து பொதுமக்களிடம் இருந்து திருப்தியற்ற கருத்துக்கள் முதல்வரின் கவனத்திற்கு வந்துள்ளன.
இந்தச் சூழலில், முதல்வர் விஜய் சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அம்மா உணவகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, சமையல் கருவிகளை உடனடியாக வாங்குவது, மேலும், உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்து, தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்குவது குறித்தும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் புதிய உபகரணங்கள் வாங்குவதற்கான செலவினங்களை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அம்மா உணவகங்கள் மீண்டும் பழையபடி தரமான உணவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
