தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், 108 இடங்களை கைப்பற்றிய நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு ஆதரவுக்கரம் நீட்ட பல்வேறு கட்சிகள் முன்வந்தன. இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) ஆதரவு கடிதம் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த தாமதத்திற்கு காரணம்கோரி, அதிமுக மற்றும் திமுக வி.சி.க. தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க முயன்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த திருமாவளவன், இதுகுறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 'முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.'
'இடதுசாரிகள் மற்றும் வி.சி.க. ஆதரவு விஜய்க்கு கொடுக்க முடிவு செய்து, நாங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தோம். ஆனால், ஆதரவு கடிதம் கொடுத்த பிறகும், முதலமைச்சர் பதவி தருவதாக அதிமுக தரப்பில் துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக்கொண்டதாகவும் எனக்கு ஒரு தகவல் வந்தது. நீங்கள் சம்மதித்தால் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக திமுக சொன்னதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. அதை நான் Fun ஆக எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர்கள் சீரியசாக ஒரு மூவ் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். நாங்கள் நாளை பத்திரிகையாளர்கனை சந்தித்து அறிவிக்கப் போகிறோம் என்று வந்துவிட்டோம்,' என திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும், 'எங்களுடைய பிரசாரம் பாஜக-வுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதுதான். திமுக-வுக்கு எதிரான வாக்குகள் சீமான் கட்சி, அதிமுக, பாஜக-வுக்கு சென்றன. எங்களுடைய பிரசாரம் த.வெ.க.-வுக்கு எளிதாகிவிட்டது. பாஜக-வுக்கு எதிராக எங்களுக்கு வாக்களித்த வாக்குகள் த.வெ.க.வுக்கு போய்விட்டது. உதாரணத்திற்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்குகள். சினிமாவில் விஜய் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர், அரசியலில் ஜோசப் விஜய் பிராண்ட் படுத்தப்பட்டதால் பெரும்பாலான கிறிஸ்தவ வாக்குகள் அந்த பக்கம் சென்றுவிட்டது. சுமார் 80 சதவீதம் கிறிஸ்தவ வாக்குள் அந்த பக்கம் சென்றுவிட்டது. முஸ்லிம் வாக்குகளில் 60 முதல் 70 சதவீதம் வாக்குகள்தான் திமுக-வுக்கு வந்துள்ளது. அங்கும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக, நாதக, பாஜக-வின் முக்கியமான (Core) வாக்குகளும் த.வெ.க.வுக்கு சென்று விட்டன. எங்கள் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது சிறுபான்மையினர் வாக்குகள். அந்த வாக்குகள் பெருமளவில் மாற்றமாகியுள்ளது. இது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,' என்றும் அவர் கூறினார்.