7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப.

தமிழகம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், காவல்துறை தீவிர அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 949 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 7, 2026 வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் போது, மொத்தம் 24,025 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். இவர்களில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 949 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிணையில் வெளிவர முடியாத 2,385 பிடியாணைகள் இந்த 7 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (NBW) நிறைவேற்றுவதற்கும், தலைமறைவு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், தொடர் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புகள் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிக்கான அமலாக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளது. மேலும், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து, தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்க இது உதவியுள்ளது.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version