சமையல் சிலிண்டர் பயன்பாட்டில் புரட்சிகரமான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே 4 மணி நேரத்திற்குள் சிலிண்டர்கள் வந்து சேரும். வழக்கமாக பயன்படுத்தப்படும் இரும்பு சிலிண்டர்கள் கனமாக இருப்பதோடு, அதில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை அறியும் வசதியும் இல்லை. இந்த சிரமங்களை போக்கும் வகையில், எடை குறைவாகவும், சிலிண்டரின் உட்புறம் தெரியும் வகையிலும் புதிய ரக சிலிண்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 'எச்பி நாவ்யா' என்ற பெயரில் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடைகளில் இந்த புதிய சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், மீனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் இந்த சேவை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சிலிண்டர்கள் துருப்பிடிக்காத தன்மையுடன், எளிதாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் நிறுவனமும் 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' என்ற பெயரில் 10 கிலோ எடையுள்ள புதிய சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த சிலிண்டருக்கான அதிவேக டெலிவரி சேவையையும் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக் செய்த 4 மணி நேரத்திற்குள் அது வீட்டிற்கே வந்துவிடும். வாடிக்கையாளர்களுக்கு வசதியான நேரத்தையும் தெரிவித்து டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.
இதே 4 மணி நேர அதிவேக டெலிவரி வசதி, சிறிய அளவிலான 5 கிலோ 'இண்டேன் சோட்டு' சிலிண்டருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெற மிகக் குறைவான ஆவணங்களே போதுமானது. இதனால், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், தனியாக தங்கி பணிபுரிபவர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிலிண்டர்களை முன்பதிவு செய்ய 'இந்தியாஆயில் ஒன்' செயலி, இந்தியாஆயில் வாடிக்கையாளர் இணையதளம் அல்லது 7588888824 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் எளிதாக எரிவாயு சிலிண்டர்களை ரீஃபில் செய்ய முடியும்.
இந்த புதிய சிலிண்டர்கள் மற்றும் அதிவேக டெலிவரி சேவை, சமையல் எரிவாயு பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவசரத் தேவைகளுக்கு உடனடியாக சிலிண்டர் கிடைப்பது பலருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

