புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று பதவியேற்றார். மே 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு 16-வது சட்டப்பேரவைக் கூட்டம் கூடும் என்றும், அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உறுதிமொழி ஏற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி (கைலாஷ்நாதன்) முன்னிலையில் அன்பழகன் எம்.எல்.ஏ உறுதிமொழி வாசித்து தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி. செல்வ கணபதி மற்றும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, திமுக, த.வெ.க., ல.ஜ.க., நேயன் மக்கள் கழகம் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் யாரும் பங்கேற்கவில்லை. தலைமைச் செயலாளர் சரத் சவுகான் மற்றும் அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், 'முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான ராஜினாமா கடிதம் எனது பரிசீலனையில் உள்ளது. சட்டப்பேரவை செயலர் தந்த கடிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. 14 நாட்கள் அவகாசம் உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். எம்.எல்.ஏ-க்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு, முதல்வர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பெரிய திரைகளிலும் காண்பிக்க ஏற்பாடு செய்யப்படும்' என தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாகவும், அனைத்துக் கட்சியினர் பங்கேற்றது நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

