தூத்துக்குடியில், யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்கச் செய்து வீடியோ வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23), மற்றும் சுடலை காலனியைச் சேர்ந்த குரு (21) ஆகிய மூன்று நண்பர்களும் சேர்ந்து, அலெக்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். பின்னர், அவர்கள் தயாரித்த வெடிகுண்டுகளை திறந்த வெளியில் வெடிக்கச் செய்து, அதன் வீடியோவை எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை அலெக்ஸ் தனது பிறந்தநாள் வாழ்த்தாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்திற்கு வந்ததையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரகாஷ், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தென்பாகம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தென்பாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த அலெக்ஸ், பிரகாஷ், குரு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், யூடியூபில் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து, வெடிக்கச் செய்து பயிற்சி எடுத்ததாகவும், தங்கள் பகுதியில் சிலரிடம் கெத்து காட்டுவதற்காக இவ்வாறு செய்ததாகவும் கைதான இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களின் வீடுகளிலும் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் சோதனை நடத்தினர். எனினும், அவர்களது வீடுகளில் எந்தவிதமான நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை.
மேலும், இந்த இளைஞர்கள் ஏதேனும் கோஷ்டி மோதல்களில் ஈடுபடுவதற்காக வெடிகுண்டுகளைத் தயாரித்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டார்களா என்பது குறித்தும் தென்பாகம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

