கர்நாடகாவில் காதல் திருமணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே 21 வயது இளம்பெண் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்த சுமலதா, ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் கஜேந்திராவை காதலித்துள்ளார். கஜேந்திரா, சுமலதாவின் உறவினர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சுமலதா வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவர் தனது உறவினர்களான போரேஷ் மற்றும் அசோக் ஆகியோருடன், சல்லகெரே-நாயக்கனஹட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் என். மகாதேவபுராவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஆட்டுக்கொட்டகைக்குச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவர்கள் வியாழக்கிழமை இரவு தங்கியிருந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியம், போரேஷ் மற்றும் அசோக் ஆகியோர் ராமசாகரா அருகே உள்ள ஈஸ்வரநதிஹிப்பே கோவிலில் கஜேந்திரா மற்றும் சுமலதாவிற்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமண விழாவின் புகைப்படங்கள் சுமலதாவின் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் மீண்டும் அதே ஆட்டுக்கொட்டகைக்குத் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று சுமலதா சிறுநீர் கழிக்க வெளியே சென்றதாகவும், ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. கஜேந்திராவும் அவரது நண்பர்களும் அப்பகுதியில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், சுமலதாவின் பெற்றோர் சனிக்கிழமையன்று தலக்கு காவல் நிலையத்தில் அவர் காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஞாயிற்றுக்கிழமை மாலை, என். மகாதேவபுரா கிராமத்தில் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு அருகில் யாரும் பயன்படுத்தாத கிணற்றில் சுமலதாவின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த வழக்கு தற்போது மொளகால்முரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே புதுமணப்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணமான சில மணி நேரங்களிலேயே நடந்த இந்த துயரம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

