உலக யானைகள் தினம்: அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் முக்கிய அறிக்கை

வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார்

இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். யானைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த நாள், யானைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களை மேம்படுத்துதல் மற்றும் மனித-யானை மோதல்களைக் குறைத்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு அறிவியல் பூர்வமான, நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான மற்றும் சமூகப் பங்கேற்புடன் கூடிய அணுகுமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. யானைகள் நமது காடுகளின் வளத்தையும், இயற்கைச் சூழலின் சமநிலையையும் பேணுவதில் மிக முக்கியப் பங்காற்றும் உயிரினங்களாகும். காடுகளில் விதைகளைப் பரப்புதல், தாவர வளர்ச்சிக்கு உதவுதல், வனப்பகுதிகளில் இயற்கையான பாதைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு சூழலியல் பணிகளை மேற்கொள்வதால், யானைகள் 'சூழலியல் பொறியாளர்கள்' எனப் போற்றப்படுகின்றன. எனவே, யானைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு உயிரினத்தை மட்டும் பாதுகாப்பதல்ல; அவற்றைச் சார்ந்துள்ள காடுகள், நீராதாரங்கள், இயற்கையான வாழ்விடங்கள் மற்றும் அங்கு வாழும் ஒட்டுமொத்த பல்லுயிரினங்களையும் பாதுகாப்பதாகும்.

தமிழ்நாட்டின் இயற்கை, வரலாறு மற்றும் பண்பாட்டுடன் யானைகளுக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. தமிழ் மரபில் யானை, வேழம், களிறு, பிடி, கரி, குஞ்சரம், வாரணம் எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் யானைகள் அழைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் தொடங்கி பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் யானைகள் வலிமை, வளம் மற்றும் வீரத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டுள்ளன. புறநானூறு, 'களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே' என யானைகள் நிறைந்த வளமான காட்டின் அழகைப் போற்றுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யானைகளும் வளமான காடுகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்ற சூழலியல் புரிதல் தமிழர் வாழ்வியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பரவியுள்ள விரிவான யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் வனப்பகுதிகளுடன் இயற்கையாகத் தொடர்ச்சியடைந்து, பரந்த மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பாக அமைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த யானைகள் எண்ணிக்கைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9.1 இலட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் ஐந்து யானைகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வனத்துறையின் நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட யானைகள் முகாம்களில், பராமரிப்பில் உள்ள யானைகள் அறிவியல் அடிப்படையிலான நடைமுறைகளின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட மனித-யானை மோதல் தணிப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

மாறிவரும் நிலப் பயன்பாடு, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள மனிதக் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளால், மனித-யானை எதிர்கொள்ளல்கள், நம் மாநிலம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சவாலாக உருவெடுத்துள்ளன. இச்சவால்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தின் வனப்பரப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், மாநிலத்தின் வனப்பரப்பு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கும், முக்கிய இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து மறுசீரமைப்பதற்கும் அரசு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் வாழ்விடத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகளின் இயற்கையான வாழ்விடங்களுக்குள் அவற்றிற்குத் தேவையான தீவன வளத்தை அதிகரித்தல், நீராதாரங்களை மேம்படுத்துதல், சீரழிந்த வனப்பகுதிகளை மறுசீரமைத்தல், அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கட்டுப்படுத்துதல், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. குறிப்பாக, அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல்களை ஒருங்கிணைந்த முறையில் தணிப்பதற்காக இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள யானைத்தடுப்பு அகழிகள் மற்றும் கதிரொளி மின்வேலிகளைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், கூடுதல் மனிதவளத்தைப் பயன்படுத்தி சிறப்பு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள், முன்கூட்டிய எச்சரிக்கை வசதிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, பொதுமக்களுக்கும் களப் பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

யானைகளின் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளைத் தடுப்பதும் மிக முக்கியமானதாகும். குறிப்பாக சட்டவிரோதமாக மின்வேலிகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் உள்ளிட்ட காரணங்களால் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு வனத்துறையும் தொடர்புடைய துறைகளும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. விவசாய நிலங்களில் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்வேலிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் செலுத்துதல் போன்ற செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. குறிப்பாக யானைகளின் வாழ்விடங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். யானைகள் குடியிருப்பு அல்லது விவசாயப் பகுதிகளுக்குள் வந்தால், வனத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் மனித உயிரிழப்பு, பயிர் மற்றும் உடைமைச் சேதம் மட்டுமின்றி யானைகளின் உயிரிழப்பையும் பெருமளவில் தவிர்க்க முடியும். யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய காடுகள் ஆரோக்கியமான காடுகளாகும். அத்தகைய காடுகளே நமக்கு நீர், தூய காற்று, வளமான மண், பல்லுயிரின வளம் மற்றும் காலநிலைத் தாங்குதிறனை வழங்குகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version