உங்கள் வீட்டின் வைஃபை சிக்னல் சுவர்களையும் தாண்டி தெரு வரை பரவி, தேவையற்ற இடங்களில் வீணாகிறதா? கவலை வேண்டாம். சாதாரண சமையலறை அலுமினிய ஃபாயில் பேப்பரைக் கொண்டு இந்த சிக்னல் கசிவுப் பிரச்சினைக்கு ஒரு எளிய, செலவு குறைந்த தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.
டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கணினி விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து, 3டி-பிரிண்டட் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய ஃபாயில் பேப்பரைப் பயன்படுத்தி, வைஃபை சிக்னலை நமக்குத் தேவையான இடங்களுக்கு மட்டும் திருப்பும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்தத் திட்டம் 'வை பிரிண்ட்' (WiPrint) என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலானோர் தங்கள் வைஃபை சிக்னல் வீட்டுக்குள் மட்டுமே இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், அமெரிக்க இணையப் பாதுகாப்பு முகமையின்படி, ஒரு வீட்டு ரவுட்டர் 150 முதல் 300 அடி வரை வீட்டிற்குள்ளும், திறந்தவெளியில் கிட்டத்தட்ட 1,000 அடி வரையும் சிக்னலை அனுப்பும் திறன் கொண்டது. இது 'வார் டிரைவிங்' போன்ற ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் இது பாதுகாப்பற்ற சிக்னல்களை ஸ்கேன் செய்ய மற்றவர்களுக்கு உதவுகிறது.
இந்த வை பிரிண்ட் திட்டத்தில், உங்கள் வீட்டின் வரைபடம், ரவுட்டர் இருக்கும் இடம், சிக்னல் தேவைப்படும் மற்றும் தேவைப்படாத இடங்கள் போன்ற தகவல்களை ஒரு மென்பொருளில் உள்ளீடு செய்ய வேண்டும். இந்த மென்பொருள், ரேடியோ அலைகளின் சிதறல்களைக் கணக்கிட்டு, வெறும் 23 நிமிடங்களில் ஒரு குறிப்பிட்ட 3டி வடிவத்தை வடிவமைத்துக் கொடுக்கும்.
இந்த 3டி வடிவத்தின் மீது அலுமினிய ஃபாயில் பேப்பரைச் சுற்றி, ரவுட்டரின் பின்புறம் வைத்தால் போதும். இதன் மொத்த தயாரிப்புச் செலவு சுமார் ரூ.3,000 மட்டுமே. இந்த ரிஃப்ளெக்டரைப் பயன்படுத்தியபோது, சிக்னல் தேவையில்லாத இடங்களில் அதன் வலிமை 10 டெசிபல் வரை குறைந்துள்ளது.
அதே நேரத்தில், சிக்னல் தேவைப்படும் முக்கிய இடங்களில் அதன் வேகம் 6 டெசிபல் வரை அதிகரித்துள்ளது. இது சிக்னல் வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது என முதன்மை ஆராய்ச்சியாளர் ஜியா சோவ் கூறியுள்ளார். சிக்னல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படும்போது, வெளியில் இருப்பவர்களால் அதை ஹேக் செய்வது கடினமாகிறது.
தற்போது, இந்த வை பிரிண்ட் தொழில்நுட்பம் ஒரு ஆராய்ச்சி முன்மாதிரியாக மட்டுமே உள்ளது. இதை உடனடியாக சந்தையில் வாங்க முடியாது. எனினும், எதிர்காலத்தில் இது போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் நமது வைஃபை சிக்னலை மேலும் பாதுகாப்பாகவும், திறமையாகவும் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பம், நமது டிஜிட்டல் வாழ்க்கையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிக்னல் கசிவைக் குறைப்பதோடு, இணையப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

