எங்களுக்கு எந்த அரசியல் பின்புலமோ, பெரிய பணபலமோ கிடையாது. ஆனால், முதல்வர் விஜய் அவர்கள் சத்தமில்லாமல் எங்களை அமைச்சர்களாக உருவாக்கி, நடக்க முடியாத காரியங்களையும் செய்து காட்டிவிட்டார் என்று அமைச்சர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் பெருமிதம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தனது உரையை ஆற்றிய அமைச்சர் நிர்மல் குமார், 'சாதாரண பின்னணியில் இருந்து வந்த எங்களை சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கியவர் முதல்வர் விஜய். எங்களுக்கென எந்தவித அரசியல் பின்புலமோ, பெரிய பணபலமோ இல்லை. சத்தமில்லாமல் எங்களை அமைச்சர்களாக்கி, சாத்தியமற்றதை சாத்தியமாக்கியவர் முதல்வர் விஜய். எங்களுக்கு விழுந்த ஒவ்வொரு வாக்கும், முதல்வர் விஜய்யின் முகத்தை நம்பிதான் விழுந்தது. அவர்தான் எங்களின் ஒரே பலம்' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், 'கடந்த தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு வெறும் 2 அல்லது 3 கோடி ரூபாய் மட்டுமே. ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரைதான் செலவு செய்திருப்பார். அதனால் தான், எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற தைரியத்துடன் நாங்கள் செயல்படுகிறோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
சிறைத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கினார். அதன்படி, சென்னை மத்திய சிறை-1ல் ரூ.8 கோடி செலவில் தொழிற்பயிற்சி நிலையம் (ITI) அமைக்கப்படும். சிறைக் கைதிகளின் பார்வையாளர்கள் சந்திப்பு மற்றும் காத்திருப்பு கூடங்களை மேம்படுத்துவதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் ரூ.3.63 கோடி செலவில் ஒருங்கிணைந்த மனநல மையம் அமைக்கப்படும் என்றும், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட சிறை வளாகம் அமைப்பதற்கு ரூ.48.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருச்சிராப்பள்ளி உயர் பாதுகாப்புச் சிறைக்காக, தனி நாய் படை (Dog Squad) ஒன்றை உருவாக்க ரூ.1.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் மூலம் சிறைத்துறையில் பல்வேறு மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் நிர்மல் குமாரின் இந்தப் பேச்சு, முதல்வர் விஜய்யின் மக்கள் செல்வாக்கையும், அவரது தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. பணபலமும், அரசியல் பின்புலமும் இல்லாத சாதாரண தொண்டர்களையும் அங்கீகரித்து, அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்திய விஜய்யின் செயல்பாடு பலராலும் பாராட்டப்படுகிறது.

