மருத்துவர் பற்றாக்குறையால் குழந்தை உயிரிழப்பு: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால், பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் அவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நயினார் நாகேந்திரன், "ஏழை எளிய மக்களின் உயிர்களின் மீது இத்தனை அலட்சியம் ஏன் திரு. விஜய் அவர்களே? சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. தனது பல மாதக் கனவை கருவிலேயே இழந்து வாடும் அந்தத் தாய்க்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?"

மேலும் அவர், "தினசரி ஏதேதோ ஆய்வு செய்வதாக ரீல்ஸ் எடுத்து வெளியிடுவதில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும், கொஞ்சம் பொறுப்புடன் தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்திருந்தால் இந்த உயிர்பலியை தவிர்த்திருக்கலாமே? எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? எதற்கு இத்தனை விளம்பர நாடகங்கள்? மாயாஜால வார்த்தைகளால் மக்களை மயக்க முயல்வதில் திமுகவை விட நீங்கள் ஒருபடி மேலேறி விட்டீர்கள். உங்களை நம்பி வாக்களித்த மக்களை தினசரி ஏதோவொரு வகையில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்."

"போதும் திரு. ஜோசப் விஜய் அவர்களே, இனியாவது உங்களை நம்பிய மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய முயலுங்கள்! தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ அமைப்புகளிலும் போதிய மருத்துவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்!" என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தமிழக அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவர் பற்றாக்குறை குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version