ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் புகார் அளித்தும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரான 'விஜய்' மோகன் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாதவிடாய் காலத்திலும் தனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லை கொடுத்து, எல்லை மீறி நடந்துகொள்ள முயன்றதாக அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஜூலை 22ஆம் தேதி முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த நாளே FIR பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.
மேலும், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக புகார் அளித்துள்ள அவர், ராணிப்பேட்டை காவல்துறையினர் விஜய் மோகனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், 'விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். எனது போனை காவல்துறையினர் கேட்டனர், அதையும் கொடுத்துவிட்டேன். சாதாரணமான விஷயங்களுக்குக் கூட காவல்துறையினர் கைது செய்கிறார்கள். ஆனால் விஜய் மோகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் ஏன் அவரை கைது செய்யவில்லை? இதற்கு என்ன நியாயம்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
'எனது கணவர் வேலைக்குச் செல்லும்போது மிரட்டல் விடுக்கின்றனர். நடிகர் விஜய்யை நம்பிதான் நாங்கள் வாக்களித்தோம். ஆனால் அதற்காக எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர் தவெக கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லையோ? அல்லது அவரது கட்சிக்காரர் என்பதால் விஜய் மோகனை காப்பாற்றுகிறார்களோ?' என்றும் ஆதங்கத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காவல்துறையின் மெத்தனப் போக்கையும், அரசியல் தலையீடு குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த விவகாரம், கட்சி நிர்வாகிகளின் பொறுப்பற்ற தன்மையையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

