கரூர் சம்பவத்தின் வடு என் மனதில் நீங்காத ஒன்றாக உள்ளது. அதிக வலியை, காயத்தை எனக்கு தந்தது அந்த கரூர் சம்பவம் தான் என முதலமைச்சர் விஜய் உருக்கமாக தெரிவித்தார்.
கரூர் த.வெ.க சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், 'என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்களே' என தனது உரையை தொடங்கினார். அப்போது, கரூரில் அன்றைய தினம் நடந்த நிகழ்வு தனது மனதில் ஆறாத வடுவாக இருப்பதாகவும், அது தனக்கு மிகுந்த வலியையும், காயத்தையும் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பெரம்பலூர் இருந்து அரியலூர் சென்றபோது காவல்துறையினர் எச்சரித்ததால் உடனடியாக திரும்பி, அதற்காக அரியலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது, காவல்துறையினர் எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லது நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கலாம் என்றும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
'நாமக்கல் பயணத்தை முடித்து கரூர் வந்தபோது பிரச்னை எனில் காவல்துறை Alert பண்ணியிருக்கலாமே. நெடுஞ்சாலையில் இருந்து எங்களை போலீசாரே அழைத்து வந்து சம்பவம் நடந்த இடத்தில் விட்டனர். இதில் போலீசார் மிகப் பெரிய நாடகம் நடத்தினர்' என்று முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டினார்.
மேலும், 'கரூர் நெரிசலின் போது போலீசாரின் நோக்கம் தெரியாமல் நம்பிவிட்டேன். இதெல்லாம் யார் சொல்லி நடந்தது? போலீசாரை அப்படி நடக்க சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்? அந்த கரூர் சம்பவத்தில் நாம் தங்க பிள்ளைகளை இழந்துள்ளோம். பச்ச பிள்ளைகளை இழந்துள்ளோம். குடும்ப உறவுகளை இழந்து வலியோடு இருக்கும் என்னை ஏளனமாக பேசுகிறீர்களே.. பழியை என் மேல போடுகிறீர்களே.. ஓடி ஒளிந்தேன் என சொல்கிறீர்களே.. வாய் ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?' என அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
'மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் நான். அவர்களை காக்க வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவன் அல்ல. நமக்கு இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு கால காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு நிரந்தரமாக பதிலடி கொடுக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த பதிலடி மட்டும் போதாது' என்றும் அவர் சூளுரைத்தார்.
'ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம் தான். கரூரில் நெரிசலில் இறந்தவர்கள் நினைவாக நினைவு சின்னம் அமைக்கப்படும்' என்றும் விஜய் அறிவித்தார்.
'ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும் பார்ட்டி பன்ட், கட்சி நிதிங்கற பேர்ல அடிக்கிற கொள்ளையாகட்டும்… தீய சக்தியா இருந்தாலும் சரி, தீர்ந்து போன சக்தியா இருந்தாலும் சரி, ரெண்டு பேரும் மாறி, மாறி இதையே தான் செஞ்சிட்டு இருக்காங்க. கட்சி நிதி என்றவுடன் சட்டசபையில் ஓடினார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம். சென்னையில் ஒரு பாலம் கட்டுவதில் ஊழல் செய்துள்ளதைக் கண்டுபிடித்து ரத்துச் செய்துள்ளோம். ஊழலில் ஊறிப்போனவர்கள் தொடர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். தோண்ட தோண்ட ஊழல் வந்துக் கொண்டே இருக்கிறது. லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாதவர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். ஒரு பைசா செலவில்லாமல் எல்லாம் நடக்கிறது. எங்களுக்கு மரியாதை கொடுப்பதாக மக்களே சொல்கிறார்கள். மக்கள் மனதில் இருக்கும் சந்தோசத்தைப் பார்த்ததை விட வேறு என்ன வேண்டும்' என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

