நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், கடந்த 23-ஆம் தேதி மாலை நடைபெற்ற திருப்பலியில், சிறுவன் ஒருவன் திருத்தந்தை 14-ம் லியோ என்பதற்கு பதிலாக 'திருத்தந்தை விஜய்' என்று கூறியது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேராலய அதிபர் இருதயராஜ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், 'குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில், நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு பகுதியில் ஒரு சிறுவன் முதல் மன்றாட்டை வாசித்தான். அப்போது, திருத்தந்தை 14-ம் லியோ என்று கூற வேண்டிய இடத்தில், தவறுதலாக 'திருத்தந்தை விஜய்' என்று கூறிவிட்டான். பேராலயப் பணியாளர்களால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னரும், சிறுவன் இவ்வாறு கூறியது மனதிற்கு வருத்தமளித்தது' என்றார்.
இதுகுறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, அவன் பதற்றத்துடன் வாசக மேடைக்கு ஏறியதாகவும், சரியாக 'திருத்தந்தை 14-ம்' என்று படித்துவிட்டு ஆரம்பித்த நிலையில், பதற்றத்தில் 'விஜய்' என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தான். சிறுவனின் தவறை பேராலயம் புரிந்துகொள்வதாகவும், இனி இதுபோல் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், இனி ஒருபோதும் வழிபாட்டில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றும் பேராலயத்தின் சார்பில் அவர் தெரிவித்துக் கொண்டார்.

