சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு முன்பு 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டும் என உயர் நீதிமன்றப் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.
மத்திய உள்துறை அமைச்சகம் 'வந்தே மாதரம்' பாடல் இசைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, தேசியக் கொடி ஏற்றும்போதும், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட வேண்டும். மேலும், குடியரசுத் தலைவர் மக்களிடம் உரையாற்றும் முன்பும் பின்பும், தேசியக் கொடியை பேரணியாக கொண்டு வரும்போதும் 'வந்தே மாதரம்' பாட வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வந்தே மாதரம்' பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். சினிமா தியேட்டர்களில் இந்தப் பாடல் இசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே, தேசத்தின் மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் 1971, தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 51(ஏ) தேசிய கீதத்திற்கு மரியாதை காட்ட மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
புதிய விதிகளின்படி, 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும் நிகழ்வில், முதலில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தாய் நாட்டை லட்சுமி, சரஸ்வதி, துர்கையுடன் ஒப்பிடும் வரிகளும் இனி இந்தப் பாடலில் சேர்க்கப்படும். மேலும், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமரியாதை செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் புதிய விதிமுறைகள் கூறுகின்றன.
1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி 'வந்தே மாதரம்' பாடலை எழுதினார். இந்தப் பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இப்பாடல் பெரும் உத்வேகத்தை அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி இது தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.
'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், தற்போது அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் இதனைப் பாட வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் முன் 'வந்தே மாதரம்' பாட வேண்டும் என உயர் நீதிமன்றப் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து எந்தத் தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

