மாற்றம் தருவோம், மாற்றம் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக ஆட்சியின் 'சூப்பரான மாற்றம்' இதுதானா என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்தியதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதமே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், தற்போது இதன் வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கல்வித்துறையின் மாண்பையே சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், சில தினங்களுக்கு முன்பு மதுரையில் விரகனூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், ஆசிரியர்கள் முன்னிலையிலேயே சக மாணவரைத் தாக்கும் மற்றும் தரக்குறைவாகப் பேசும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சம்பவங்களும் கல்வித்துறையின் ஒட்டுமொத்த நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேடைக்கு மேடை முழங்கி ஆட்சிக்கு வந்த தவெக ஆட்சியின் இந்த 'மாற்றம்' குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது, ஆயுதங்களைக் கொண்டு வருவது, ஒழுங்கீனமாக நடந்துகொள்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் வேளையில், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் பெயரையும் அவமதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
தவெக ஆட்சியில் பள்ளிகளில் ரீல்ஸ் மோகங்களும், சினிமா பாடல்களும் வளர ஆரம்பித்தபோது, அறநெறி வகுப்புகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்துவிட்டன என்பதே உண்மை என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் போதிக்க வேண்டியது ஒழுக்கமும் கீழ்ப்படிதலும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இனி இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவங்கள் கல்வித்துறையின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

