திமுக கூட்டணியில் சுயமரியாதையை இழந்தோம் – வைகோ வேதனை

திமுக கூட்டணியில் பயணித்தபோது சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழக்க நேரிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், காணாமல் போகும் நிலையில் இருந்த கட்சிக்கு 10 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா இடத்தையும் திமுக வழங்கியதாகக் குறிப்பிட்டார். கிளைகள் கூட இல்லாத விசிக கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டது நம்மை அவமானப்படுத்தும் செயல் என்றும் அவர் கூறினார்.

மேலும், திமுகவை உயர்த்திப் பிடித்து பேசிய தலைவர்களில் தான் ஒருவன் என்றும் வைகோ தெரிவித்தார். நடிகர் விஜய் இன்னும் ஆறு மாதங்களுக்குள் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வார் என்றும், அவரிடம் கருத்தும் காரமும் இருப்பதாகக் குறிப்பிட்டார். தவெகவுடன் சேர்வதற்கு 50 கோடி ரூபாய் பேரம் பேசினோமா என்றும், தானும் தன் மகனும் அண்ணா சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிவிட்டோமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும் என்பது போல ஒருவர் பேசுவதாகவும், தனக்கு பணத்தாசை கொஞ்சமும் கிடையாது என்றும் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார். நமது கட்சிக்கான சோதனை காலம் முடிந்துவிட்டதாகவும், பனிகாலம் முடிந்து வசந்த காலம் வரப்போவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

9 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தொண்டர்களின் காயங்களுக்கு மருந்து இடப்படும் என்றும் கூறினார். தன்மானத்தையும், சுயமரியாதையையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் வைகோ உறுதியளித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version