வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி தண்டனை? எல்லை மீறிய செயல்

இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் எல்லை மீறி நடந்துகொண்ட இந்திய ஏ அணியின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி தரப்பிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில், சூப்பர் ஓவரில் இந்திய ஏ அணி இலங்கை ஏ அணியிடம் தோல்வியடைந்தது. சூப்பர் ஓவரில் 19 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியா, 9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆட்டம் முடிந்த பிறகு, மைதானத்தை விட்டு வெளியேறிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பந்துவீச்சாளர் குகதாஸ் மதுலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபமடைந்து, இலங்கை வீரர் ஒருவரின் நெஞ்சில் பலமாகத் தள்ளி மோதலில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த மூத்த வீரர் நிரோஷன் டிக்வெல்லா தலையிட்டு இருவரையும் விலக்கி வைத்தார். இதற்கு முன்பாக, ஆட்டத்தின் போது வீசப்பட்ட நோ-பால் விவகாரத்தில் கேப்டன் திலக் வர்மா நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தபோது, சூர்யவன்ஷியும் மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களிடம் ஆக்ரோஷமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த எல்லை மீறிய செயல் ஐசிசி நடத்தை விதிமுறை 2.12-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மைதானத்தில் வீரர்கள் அல்லது நடுவர்களிடம் தேவையற்ற உடல் ரீதியான மோதலில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற மோதலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.

போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் இந்த மோதல் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அவர் சூர்யவன்ஷிக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அல்லது போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் அசத்தி, விரைவில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகவுள்ள வேளையில், வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஒழுங்கீன செயல் அவருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இலங்கை வீரர் தான் அவரை சீண்டினார் எனக் கூறப்பட்டாலும், வைபவ் அதற்காக கையை வைத்து தள்ளி இருக்கக் கூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version