உஸ்பெகிஸ்தானில் மருத்துவப் படிப்பு படித்து வந்த கேரள மாணவி ஒருவர், சக மாணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஹரிபாடு காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாட்டைச் சேர்ந்த சவரியா பசந்த் என்பவர், உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவருடன் படித்த சக மாணவரான மலப்புரத்தைச் சேர்ந்த சதருல் ஆனம் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சதருல் ஆனம் தான் கையில் வைத்திருந்த லேப்டாப்பால் சவரியா பசந்தின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சவரியா பசந்த் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சவரியா பசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சதருல் ஆனமை உஸ்பெகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சவரியா பசந்த்தின் தந்தை, உஸ்பெகிஸ்தான் சென்று தனது மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஹரிபாடு காவல் நிலையத்தில் சவரியா பசந்த்தின் குடும்பத்தினர் இது குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், ஹரிபாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சவரியா பசந்த்தின் உடலை ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் அதிகாரி பினுகுமார் கூறுகையில், 'குற்றம் இந்தியாவிற்கு வெளியே நடந்திருந்தாலும், கேரளாவில் வழக்குப்பதிவு செய்ய அதிகாரம் உள்ளது. சம்பவம் உஸ்பெகிஸ்தானில் நடந்திருந்தாலும், இங்கு வழக்குப்பதிவு செய்வதற்கான விதிமுறைகள் உள்ளன. குற்றவாளி அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விவரம் குறித்தும், உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை குறித்தும் தெரிந்துகொள்ள இந்தியத் தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக நடவடிக்கை எடுப்போம்' என்று தெரிவித்தார்.
சக மாணவரின் லேப்டாப் தாக்குதலால் மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

