அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை: டிரம்ப் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் ‘செக்’!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினருக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிறப்புரிமை குடியுரிமையின் பரந்த கருத்தாக்கத்தை உறுதி செய்து, அமெரிக்க அரசியலமைப்பின் 14-ஆவது திருத்தத்தின்படி, அங்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற 150 ஆண்டுகால மரபை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப் 2025 ஜனவரியில் இந்த அவசர உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் அல்லது தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் தானாகக் குடியுரிமை வழங்கக் கூடாது என அந்த உத்தரவு கட்டுப்பாடு விதித்தது. பெற்றோரில் ஒருவராவது அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவராகவோ இருந்தால் மட்டுமே குழந்தைக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, 6-3 என்ற நீதிபதிகள் வாக்கு வித்தியாசத்தில் டிரம்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இந்த உத்தரவு அமலுக்கு வந்திருந்தால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் சுமார் 2,50,000 குழந்தைகள் குடியுரிமையற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். டிரம்பின் மிக முக்கியமான குடியேற்றக் கொள்கையை முடக்கியுள்ள இந்த தீர்ப்பு, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version