உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஓவரி கிராமத்தைச் சேர்ந்த அமீனா, கடந்த 9-ம் தேதி பிரசவத்திற்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்ப காலத்தில் ஸ்கேன் செய்ததில், வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அமீனாவுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாள் இரவே முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. அமீனாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் சிசேரியன் சிகிச்சையைத் தவிர்த்து, சுகப்பிரசவத்துக்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி மேலும் மூன்று குழந்தைகளையும் அமீனா சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார். இவ்வாறு ஐந்து நாட்கள் நீடித்த சுகப்பிரசவத்தில் மொத்தம் நான்கு குழந்தைகள் (2 ஆண், 2 பெண்) பிறந்துள்ளன. தாயும் நான்கு குழந்தைகளும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ஷுப்ரா அகர்வால் கூறுகையில், 'இந்த மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறப்பது இதுவே முதல் முறை. அதிக ரிஸ்க் இருந்தபோதும், மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளித்து, குழந்தைகளை சுகப்பிரசவத்திலேயே பெறச் செய்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு குழந்தைகளும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version