அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வழக்கு பாயும் – டிடிவி தினகரன் எச்சரிக்கை

அதிமுகவிலிருந்து தமாகாவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமாகா அரசின் பெரும்பான்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

"இந்தத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என்ற பெயரில், வேட்பாளர் யார் என்றுகூட தெரியாமல் மக்கள் தமாகாவுக்கு வாக்களித்துவிட்டனர். நல்லவேளையாக, தமாகாவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்டனர். வரும் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொட்டு அதிமுக இது போன்ற பின்னடைவுகளைச் சந்திப்பது வழக்கம். இந்த சோதனைகளைக் கடந்து, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2006-ல் விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததால் திமுக மைனாரிட்டி ஆட்சியமைத்ததை அவர் சுட்டிக்காட்டினார். "மாகாவுக்கு எதிராகத்தான் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது எப்படி அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள்? விசிக, இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றனர். தமாகா அரசு பெரும்பான்மை இல்லாமல் ஊசலாட்டத்தில் இருப்பதால் தான், அமமுகவின் எம்எல்ஏ-வை இழுத்துள்ளனர். மன்னார்குடியில் அமமுக எம்எல்ஏ தமாகாவையும் எதிர்த்து வெற்றி பெற்றவர். அவரின் ஆதரவை எப்படி தமாகா பெற முடியும்?" என தினகரன் கேள்வி எழுப்பினார்.

"அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய், எப்படி அதிமுகவின் 25 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற முடியும்? அதிமுகவிலிருந்து சென்று தமாகாவை ஆதரிப்பவர்கள், ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயம்? நாங்கள் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் உள்ளோம். மன்னார்குடி எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி தருவதாகச் சொல்லிதானே தமாகாவுக்கு அழைத்துள்ளீர்கள்? இது குதிரை பேரம் தானே. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், உறுதியாக சிபிஐ விசாரணை கோருவோம். அதன் பிறகு இந்த ஆட்சிக்கு கஷ்டகாலம் தான். இடதுசாரிகள், விசிக இன்னும் ஆறு மாதங்கள் தாங்குவார்களா? தமாகா ஆட்சியின் ஆயுள்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது," என அவர் கூறினார்.

"அதிமுகவிலிருந்து தமாகாவுக்கு ஆதரவு கொடுத்த 25 எம்எல்ஏ-க்களின் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அதிமுக பொதுச்செயலாளரால் மட்டுமே கொறடாவை நியமிக்க முடியும் என பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. சபாநாயகர் இன்னும் எத்தனை நாட்கள் காலம் தாழ்த்த முடியும்? பழனிசாமி தரப்பு நீதிமன்றம் சென்றால் எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும். தமாகா அமைச்சர்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. 'ரீல்ஸ்'ஐ நம்பி மட்டும் ஆட்சி நடத்த முடியாது," என தினகரன் குறிப்பிட்டார்.

"ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க, அவரது தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். மனவருத்தங்கள் இருந்தால் பேசித் தீர்க்க வேண்டும். தமாகா அதிமுகவை, ஜெயலலிதாவின் இயக்கத்தை அழிக்கப் பார்க்கிறது. அதனை தனிப்பட்ட கோபதாபங்களுக்காக விட்டுக்கொடுக்கக் கூடாது. அதிமுகவிலிருந்து தமாகாவுக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்கள் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்தது. அதுபோல அதிமுக தலைவர்களும் பொறுமை காக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் பெயரைச் சொல்லி தமாகாவுக்கு ஆதரவு கொடுத்தால் வரலாறு அவர்களை மன்னிக்காது. எம்.ஜி.ஆர் தொடங்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை விஜய் அழிக்கப் பார்க்கிறார் என்பதே உண்மை. அதற்கு யாரும் பலியாக வேண்டாம். சட்டப்படி பழனிசாமி தான் பொதுச்செயலாளர், அவருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

"சட்டைப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு, அதிமுகவையும், அமமுகவையும் அழிக்க, தமாகாவுக்கு ஏஜெண்டாக செயல்படுகிறார். அவர் பழனிசாமியை பார்த்து அம்மாவின் ஆத்மா மன்னிக்காது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் ஆத்மா செங்கோட்டையனை மன்னிக்காது," என அவர் ஆவேசமாக கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version