தவெக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'புஷ்பா' பட பாணியில் ஆட்சி நடப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் 65% மக்கள் தங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாகவும், 4.93 கோடி வாக்குகளில் ஆளுங்கட்சி வெறும் 1.72 கோடியை மட்டுமே பெற்றுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லாத இந்த ஆட்சி மீது மக்களுக்கும் நம்பிக்கை குறைந்து வருவதாக அவர் கூறினார். மேலும், முதல்வர் தனிப்பட்ட முறையில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில் வெற்றி பெற்றும் ராஜினாமா செய்துள்ளதாகவும், மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட உதயநிதி, அதிமுக பிளவுபட்டு, அதில் ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெற்ற பின்னரும், அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு முதல்வர் சென்றது 'புஷ்பா' பட பாணியில் ஆட்சி நடப்பதாக அவர் விமர்சித்தார். ஊழல் சக்திகளுடன் இணைந்து செயல்படும் ஆளுங்கட்சியை மக்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வருத்தத்தில் இருப்பதாகவும், கடன் பெற்று ஆட்சியை நடத்தும் முதல்வர் தவறான கருத்துக்களால் மக்களை திசை திருப்புவதாகவும் குற்றம்சாட்டிய உதயநிதி, திமுக கொண்டு வந்த திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக நிறுத்த வேண்டாம் என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குறிப்பாக, மாதம் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகைக்காக காத்திருப்பதாகவும், 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், நிஜமான ஆட்சியாக நடத்துங்கள்' என்றும் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, திமுகவினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version