போக்குவரத்து போலீசாருக்கு சீருடை அணிந்து கடைக்கு செல்ல தடை

போக்குவரத்து காவலர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்த சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி.

போக்குவரத்து காவலர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீருடையுடன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சட்ட-ஒழுங்கு காவலர்களை விட பொதுமக்களை அதிகமாக சந்திக்கும் வாய்ப்பு போக்குவரத்து காவலர்களுக்கே அதிகம் உள்ளதால், அவர்கள் மிகவும் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள சூழலில், பொதுமக்கள் பலரும் செல்போன்கள் மூலம் நல்ல மற்றும் தவறான செயல்களை உடனுக்குடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். எனவே, காவல்துறையினர் பொதுமக்களிடம் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். சில போக்குவரத்து காவலர்கள் சீருடையை சுத்தமாக அணியாமல் பணியில் ஈடுபடுவது கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதை சரிசெய்ய அனைத்து போக்குவரத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண் காவலர்கள் பணியின் போது நகைகள் அணியக்கூடாது என்ற விதிமுறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை காமராஜர் சாலை வழியாக சென்றபோது, ஒரு போக்குவரத்து காவலர் சீருடையுடன் ஒரு கடையில் மீன் வாங்கிக்கொண்டிருந்ததை தான் நேரில் கண்டதாக சாமுண்டீஸ்வரி கூறியுள்ளார். இது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பணியில் இருக்கும் போதும், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும், சீருடை அணிந்த நிலையில் எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கக்கூடாது. சீருடையுடன் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கினாலும், பொதுமக்கள் அதை இலவசமாக வாங்குவதாக தவறாக கருதும் அபாயம் உள்ளது. ஒரு காவலரின் தவறான நடத்தை ஒட்டுமொத்த காவல் துறையின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் தங்களது நடத்தை மற்றும் ஒழுக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை அனைத்து போக்குவரத்து காவலர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். இந்த புதிய விதிமுறைகள் காவலர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றும், பொதுமக்களிடையே காவல்துறையின் மீதான நன்மதிப்பை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவு காவல்துறை வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version