தமிழகத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்வது சந்தேகமே என பாஜக மூத்த நிர்வாகி கஸ்தூரி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நூறு நாள் ஆட்சி மீது மக்கள் பெரிய அளவில் விமர்சனங்கள் வைக்கவில்லை என்றும், குறிப்பாக பெண்கள் முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.
போதை கலாச்சாரத்தை ஒழிப்பதற்கும், பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கும் அரசு அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்ததை கஸ்தூரி விமர்சித்தார். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், இத்திட்டத்திற்காக 90 சதவீதம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பரந்தூர் பகுதி மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த அறிவிப்பால் எதிர்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்திருப்பதை முதலமைச்சர் விஜய் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவெக அரசு முயற்சித்து வருவதாகவும், ஆனால் நிதி நிலைமை அதற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை என்றும் கஸ்தூரி கேள்வி எழுப்பினார். பொருளாதார வளர்ச்சி இல்லாமல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கேட்டார்.
தொடர்ந்து, தவெக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து பயணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, அது சந்தேகம்தான் என்றார். முதலமைச்சர் விஜய்யை நாளைய பிரதமர் என தவெகவினர் அழைப்பதை காங்கிரஸ் விமர்சித்துள்ளதையும், மகப்பேறு விடுப்பு விவகாரத்திலும் தவெகவை காங்கிரஸ் விமர்சித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால், காங்கிரஸுடன் கூட்டணியில் தொடருமா என்பது கேள்விக்குறிதான் என்றும், தங்கள் அமைச்சரவையில் உள்ள இரு காங்கிரஸ் அமைச்சர்களையும் தவெக வெளியேற்ற வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் உடை விஷயம் குறித்து அமைச்சர் கீர்த்தனா அளித்த பதில் அருமையாக இருந்ததாகவும், பெண்கள் குறித்து மோசமாக விமர்சனம் செய்பவர்களுக்கு செருப்படி கொடுத்தது போல கீர்த்தனா பதில் அளித்திருப்பதாகவும் கஸ்தூரி தெரிவித்தார்.

