திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதியவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சிரமம் நீங்கியுள்ளது. இனி 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெறும் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இனி 30 நிமிடங்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்க இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தரிசனத்திற்காக தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தரிசனம் செய்ய விரும்பும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், தங்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயது சான்றை கவுண்டர் எஸ் 1-ல் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், கோயிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழ் உள்ள மண்டபம் வழியாக எளிதாக செல்லலாம். இந்த வழித்தடத்தில் படிக்கட்டுகள் இல்லாததால், முதியவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல முடியும்.
தரிசன வரிசைக்கு சென்றவுடன், சுமார் 30 நிமிடங்களுக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதியவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மேலும், தரிசனத்திற்குப் பிறகு முதியவர்களுக்கு இலவசமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். இவர்களுக்காகவே சிறப்பு உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக, பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கவுண்டருக்கும், அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியவர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி, விரைவாக தரிசனம் முடித்துவிட்டு திரும்பலாம்.
இந்த புதிய திட்டம், திருப்பதிக்கு வரும் முதிய பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இனி அவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

