இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் டி20 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு பாணி விதிமீறல் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டிம் டேவிட் நடுவரிடம் முறையிட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டிரென்ட் ராக்கெட்ஸ் மற்றும் பிர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடிய டிம் டேவிட், வெறும் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் தாரிக், ஓடிவந்து திடீரென சற்று நின்று, கையை பக்கவாட்டில் திருப்பி பந்துவீசும் ஒரு வித்தியாசமான பாணியைக் கொண்டவர். அவர் வீசிய பந்தில் ஆட்டமிழந்த டிம் டேவிட், உஸ்மான் தாரிக் பந்தை முறையாக வீசவில்லை என்றும், அதை நோ-பால் என அறிவிக்க வேண்டும் என்றும் உடனடியாக கள நடுவரிடம் புகார் அளித்தார்.
மேலும், நடுவரின் முடிவை எதிர்த்து ரிவ்யூ கேட்கவும் டிம் டேவிட் முயன்றார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர் ஏற்கவில்லை. இதனால் மிகுந்த அதிருப்தியுடன் டிம் டேவிட் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், உஸ்மான் தாரிக் தனது கையை அளவுக்கு அதிகமாக மடித்து பந்தை எறிவதாகவும், நடுவர்கள் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், பேட்டிங் செய்யும்போது திணறும் வீரர்கள், பந்துவீச்சாளரின் பாணியைக் குறை கூறுவது வழக்கமாகிவிட்டதாகக் கூறி, உஸ்மான் தாரிக்கிற்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் விதிமுறை 21.2 இன் படி, பந்துவீச்சாளர் கையை வீசும்போது முழங்கை மூட்டை அளவுக்கு அதிகமாக நிமிர்த்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், உஸ்மான் தாரிக்கின் இந்த பந்துவீச்சு முறையை பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமி ஏற்கனவே இரண்டு முறை சோதனை செய்து, அவர் விதிகளுக்கு உட்பட்டே பந்து வீசுவதாக உறுதி செய்துள்ளது. ஐசிசி விதிப்படி 15 டிகிரி வரை கையை மடக்கலாம் என்றும், உஸ்மான் தாரிக் அதற்கு உள்ளேயே கையை மடக்குகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் இதற்கு முன்னர் உஸ்மான் தாரிக்கிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

