உத்தரப்பிரதேச மாநிலம் ஹசன்பூர் பகுதியில் உள்ள தௌரியா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18) ஆகிய மூன்று சகோதரிகள், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதற்காக, தங்களுக்கு கேமராமேனாக பணியாற்றி வந்த விகாஸ் (20) என்பவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள இந்த சகோதரிகள், தினமும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களது வீடியோக்களில், ஷியாம்பூரி கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் என்ற இளைஞர் கேமராமேனாக பணியாற்றியதோடு, சில வீடியோக்களில் கணவர் போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
தங்களுக்கு திருமணம் செய்து வைத்தால், வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும் என்றும், இதனால் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்வது தடைபடும் என்றும் சகோதரிகள் அஞ்சியுள்ளனர். இதன் காரணமாக, மூவரும் தங்களது கேமராமேன் விகாஸை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
கடந்த 17-ம் தேதி, கிராமத்தில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில், நெருப்பை சாட்சியாக வைத்து இந்த திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்துகொண்ட வீடியோவை மூன்று சகோதரிகளும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பலரிடமிருந்து கடும் எதிர்ப்புகளையும் பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சகோதரிகள் 6 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில், 'நாங்கள் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள், எங்களால் பிரிந்து வாழ முடியாது. பெற்றோர் எங்களுக்கு தனித்தனியே வரன் பார்க்கத் தொடங்கியதால், சாவதை விட ஒரே நபரை திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் என முடிவெடுத்தோம். எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டோம். புராண காலத்தில் தசரத மன்னருக்கு மூன்று மனைவிகள் இருந்தபோது, நாங்கள் செய்ததில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் எந்த மதத்தையும் அவமதிக்கவில்லை' என்று விளக்கமளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என்றும், ஆனால் வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ரீல்ஸ் வீடியோ எடுத்த கேமராமேனை மூன்று சகோதரிகள் திருமணம் செய்த இந்த அசாதாரண சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

