தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்: திருமாவளவன்

மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்குப் பதிலாக, இந்த நிதியைக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளைப் போன்று உயரிய வசதிகளுடன் கூடிய 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமித்தால் அது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தைக்குப் போடப்படும் தங்க மோதிரம் சில மாதங்களிலேயே பொருந்தாமல் போய்விடும் என்பதால், இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி மேடைகளில் கூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசியிருக்கக் கூடாது என்றும், இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version