தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு வன கிராமங்களில் பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிப்பதாக சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் போன்ற பயிர்களை விளைவித்து வாழ்ந்து வருகின்றனர். வன உயிரினங்கள் அழிந்து வரும் சூழலில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் இயற்கை சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும், அங்கு வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர். நவீன உலகின் வசதிகளைப் புறக்கணித்து, இயற்கையோடு இயைந்து வாழும் இவர்களின் வாழ்க்கை முறை போற்றுதலுக்குரியது. அவர்களின் வாழ்வாதாரம் காடுகளையும் மலைகளையும் சார்ந்திருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் இயற்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. இத்தகைய சூழலில், அவர்களை வெளியேற்றும் தீர்ப்பு இயற்கையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக பாதிப்பையே ஏற்படுத்தும் என சீமான் கூறியுள்ளார்.
அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கம்பிவடங்கள், மின் கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும், வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திட்டங்களை அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியினரை வெளியேற்றுவது, தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மலைக்காடுகளையும் வன உயிரினங்களையும் பாதுகாக்க உண்மையான அக்கறை இருந்தால், காடுகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதையும், டன் கணக்கில் கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும். மேலும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்காக வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
எனவே, தமிழ்நாடு அரசு 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி, தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும், மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

