இந்து சமய அறநிலையத்துறையின் அதிரடி நடவடிக்கையால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் வாடகை பாக்கியாக இருந்த சுமார் 9 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, லஸ் சர்ச் சாலையில் சுமார் 14 கிரவுண்டு 910 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம், 1901 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் நீண்ட காலமாக வாடகைத் தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் இணைந்து நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்காக, நிலுவைத் தொகையை மீட்பதற்கான அதிரடி ஜப்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 18 ஆம் தேதி, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கி இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதிகாரிகளின் இந்த கெடுபிடியான நடவடிக்கைக்குப் பிறகு, அந்த நிறுவனம் 10 சதவீத டி.டி.எஸ் தொகையைக் கழித்துக் கொண்டு, மீதமுள்ள ரூ.8 கோடியே 77 லட்சத்து 20 ஆயிரத்து 436 ரூபாயை உடனடியாக கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.
கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட இந்தத் தொகையைத் தவிர்த்து, வருமான வரித்துறையிடமிருந்து மீதமுள்ள டி.டி.எஸ் தொகையையும் மீட்பதற்கான சட்டப்பூர்வமான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக அன்பர்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையிலும், கோயில் சொத்துகளையும் அதன் உரிமைகளையும் மீட்டெடுக்கும் நோக்கிலும் இந்து சமய அறநிலையத்துறை திறம்படச் செயல்படுத்திய இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் பாராட்டுதலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

