கோவில் சொத்துக்கள்: ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதாக தவெக அரசு மீது குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதாக ஆளும் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இந்து கோயில்களுக்கு எதிரான வெட்கக்கேடான துரோகச் செயல் என விமர்சனங்கள் வலுத்துள்ளன.

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், குச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோயில், மற்றும் வெங்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய நான்கு முக்கிய திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 3084 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை நீக்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க வழிவகை செய்யும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையருக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைத்துள்ள அறிவிப்பாணை தற்போது வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதிதாகப் பதவியேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலயச் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கியத் திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், 'குறிப்பாக, நேற்று (ஜூலை 9ஆம் தேதியன்று) காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

'திருக்கோயில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்? ஆக, திருக்கோவில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் திரு. ரமேஷ்' என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியில்கூட இப்படி ஒரு துரோகம் நிகழவில்லை என்றும், ஆன்மீகப் போர்வையில் வந்துள்ள திரு. ஜோசப் விஜய் அரசு மிகத் துணிச்சலாக இந்தச் செயலைச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்கள் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் திரு. விஜய் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version