தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் பலன்கள் தகுதியான அனைவருக்கும் முழுமையாக சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், அதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில், வீட்டு மின்நுகர்வோர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், பொதுமக்களுக்கு கூடுதல் பயன் அளிக்கும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், 'பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்' என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்புகளுக்கு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் இத்திட்டம் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் நுகர்வோருக்கு கடனுதவியும் மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி, 1 கிலோ வாட் சோலார் தகடுக்கு ரூ.30,000, 2 கிலோ வாட்-க்கு ரூ.60,000, மற்றும் 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் உள்ள இணைப்புகளுக்கு ரூ.78,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
இந்த கடனுதவி மற்றும் மானியத் தொகை, சோலார் திட்டப் பணிகள் நிறைவடைந்த 7 முதல் 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 1 கிலோ வாட் சோலார் தகடு மூலம், ஒரு நாளைக்கு 4 முதல் 5 யூனிட்டுகள் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம், நுகர்வோர் செய்யும் முதலீட்டை குறுகிய காலத்திலேயே திரும்பப் பெற முடியும்.
திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 4,113 மின் இணைப்புகள் வழங்குவதை இலக்காகக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 1,200 மின் இணைப்புகள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் விழிப்புணர்வு முகாம்களைப் போலவே, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து இது போன்ற முகாம்களை நடத்த துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் முகாமில், இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் தங்கள் அனுபவங்களையும், திட்டத்தின் நன்மைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். மேலும், பலர் புதிய சோலார் மின் இணைப்பு பெறுவதற்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள், pmsuryaghar.gov.in அல்லது www.solarrooftop.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாகவோ அல்லது 'PM-suryaghar' என்ற மொபைல் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, தற்போதைய மின் கட்டண ரசீது மட்டும் போதுமானது. எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சூரிய சக்தி மின்சார திட்டத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

