தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டிகள், 2026-27 கல்வியாண்டிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளன. பள்ளி, குறுவட்டம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநிலம் என பல்வேறு நிலைகளில் இந்த கலைப் போட்டிகள் நடத்தப்படும்.
கதை கூறுதல், பேச்சுப் போட்டி, ஓவியம் வரைதல், நாட்டுப்புற நடனம், மெல்லிசை போன்ற பல்வேறு கலைகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்த கலைத் திருவிழா ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டிலும், இந்த கலைத் திருவிழா போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
போட்டிகள், மாணவர்களின் வயது மற்றும் வகுப்பிற்கு ஏற்ப ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 1 மற்றும் 2 ஆம் வகுப்பு, 3 முதல் 5 ஆம் வகுப்பு, 6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு, மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பல குரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் இடம்பெறும்.
போட்டிகளின் கால அட்டவணை விவரங்கள்: பள்ளி அளவிலான போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும். குறுவட்ட அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 19 முதல் 21 வரை நடைபெறும். வட்டார அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறும். மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 8 முதல் 15 வரை நடைபெறும். இறுதியாக, மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் 7 முதல் 28 வரை நடத்தப்படும்.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 'கலையரசன்' மற்றும் 'கலையரசி' போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். மேலும், தரவரிசையில் முதலிடம் பெறும் 25 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான அனைத்து பணிகளையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

