தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் 31-ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படும் என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோழிகளின் எடையில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க வலியுறுத்தி இந்த கடையடைப்புப் போராட்டத்தை வணிகர்கள் முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கோழி இறைச்சி, குறிப்பாக சிக்கன், குறைந்த விலையில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக் கோழி எனப் பல்வேறு வகைகளில் இவை வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டுக்கோழியின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அதில் அதிக சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதும். தற்போது, தோல் உரிக்கப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி சுமார் ரூ.370 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர் கோழி) விற்பனை செய்யப்பட மாட்டாது என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு கறிக்கோழி கிடைப்பதில் தற்காலிகப் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தஞ்சாவூரில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு மிக நெருக்கமான நேரத்தில் பண்ணையாளர்கள் தீவனம் வழங்குவதாகவும், இதனால் அவற்றின் எடை செயற்கையாக அதிகமாகக் காட்டப்படுவதாகவும் வணிகர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரம் முன்னதாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி கட்டத்தில் உணவு வழங்குவது சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, எடை ஏமாற்றும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் ஆபத்தும் தேவையில்லாமல் ஏற்படுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீவனம் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஒரு கட்டாய வழிகாட்டு நெறிமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும், இதனை சட்டமாகவும் மாற்ற வேண்டும் என்றும் கோழி வணிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், அந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஒருவேளை இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கோழி விற்பனையை முழுமையாக நிறுத்தப் போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அதுமட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் வள்ளலார் தினம், மகாவீரர் ஜெயந்தி போன்ற நாட்களில் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்படும் தடையை நிறுத்தி, விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

