தமிழ்நாட்டின் கல்வித்துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், குழந்தை மையக் கல்வியை நோக்கி அரசுப் பள்ளிகள் பயணிக்கவுள்ளன. இனி கணித வகுப்புகள் கதைகள் சொல்லும் வடிவில் நடத்தப்படும் என்றும், STEM கல்வி முறையிலிருந்து STEAM முறைக்கு மாறவுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், காலத்திற்கேற்ப கல்வி மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 'முன்பு நிலாவைக் காட்டி சோறூட்டினோம், இன்று சந்திராயனை நிலாவிற்கு அனுப்பிவிட்டோம். உணவுப் பழக்கம், உடை, பாவனை என அனைத்தும் மாறிவிட்டன. இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வியும் மாறுகிறது. இனி அரசுப் பள்ளிகளில் கல்வி என்பது குழந்தை மையக் கல்வியாக மாறும்' என்று அவர் கூறினார்.
புதிய பாடத்திட்டத்தில், கணித வகுப்புகள் கதை சொல்லும் முறையில் நடத்தப்படும். மேலும், தமிழ்நாடு STEM (Science, Technology, Engineering, Maths) கல்வி முறையிலிருந்து STEAM (Science, Technology, Engineering, Arts, Maths) முறைக்கு மாறவுள்ளது. இதன் மூலம், அறிவியல் வகுப்புகள் கலையையும் உள்ளடக்கியதாக மாறும் என அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களின் புத்தகப் பை சுமை குறைக்கப்படும் என்றும், பாடப்புத்தகங்கள் படப் புத்தகங்களாக மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், மாணவர்களுக்கு அதன் பயன்பாடுகளைக் கற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். 'AI யாரோட வேலையையும் பறிக்காது. Prompt Engineering கற்றுக்கொண்டால் போதும், AI-ஐப் பற்றி பயப்பட வேண்டாம். அமெரிக்காவின் கண்டுபிடிப்பு சுந்தர் பிச்சை. அவர் இல்லை என்றால் இன்று கூகுளே இல்லை. ஆகவே AI-ஐ பார்த்து பயப்பட வேண்டாம். மாணவர்களுக்கு AI-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்களை உருவத்தை வைத்து கேலி செய்யும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். 'அடித்துச் சொல்லிக் கொடுத்த காலம் போய்விட்டது. ஆடிச் சொல்லிக் கொடுங்கள், பாடிச் சொல்லிக் கொடுங்கள். எந்தப் பள்ளியிலும் ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ, சக மாணவர்களோ குழந்தைகளை `கருப்பா', `பல்லா', `குள்ளா' என்று உருவத்தைக் கேலி செய்து கூப்பிடாதீர்கள். அது அந்த குழந்தைகளை மனரீதியாகக் காயப்படுத்தும்' என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த மாற்றங்கள் மூலம், தமிழ்நாட்டின் கல்வி கற்றலை ஒரு இனிமையான அனுபவமாக மாற்றியமைக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த புதிய கல்வி முறை மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தை தூண்டும் என்றும், அவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த புதிய கல்வித் திட்டத்தின் மூலம், மாணவர்கள் பாடங்களை வெறுமனே மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, அதனை நன்கு புரிந்துகொண்டு, தங்கள் வாழ்வில் பயன்படுத்தும் வகையில் கல்வி கற்பார்கள். இது தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய படியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

