வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியான இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதிகளைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, 30.06.2026 அன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
திட்டத்தின்படி, விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் 30.09.2026 அன்றுடன் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
உதவித்தொகையின் அளவு கல்வித்தகுதியைப் பொறுத்து மாறுபடும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகையாக, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள். இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேலை தேடும் இளைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

