அரசு அள்ளிக் கொடுத்த திட்டங்கள்: முதியோர் காப்பீடு முதல் 20 லட்சம் பேருக்கு பட்டா வரை!

தமிழக சட்டசபையில் வருவாய், பேரிடர் மேலாண்மை, மக்கள் நல்வாழ்வுத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டசபையில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர், தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய மற்றும் முக்கிய திட்டங்களை அறிவித்தனர். இந்த அறிவிப்புகள் தமிழக மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ், சான்றிதழ்கள் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. தற்போதுள்ள நான்கு படிநிலைகளுக்குப் பதிலாக, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் அல்லது தாசில்தார் என மூன்று நிலைகளாக மாற்றியமைக்கப்படும். மேலும், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நலன் கருதி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நில வரி வசூல், 1436 பசலி ஆண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்படும். கிராம நத்தம் காலி மனைகளில் வீடு கட்டி வசித்து வரும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்க ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கணினி மயமாக்கலில் நத்தம் நிலப்பதிவேடுகளில் ஏற்பட்ட பிழைகளை திருத்த சிறப்பு முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும். நில அளவைப் பணிகளை விரைந்து முடிக்க, களப்பணியாளர்களுக்கு 136.68 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கருவிகள் வழங்கப்படும். நில அளவை மற்றும் பட்டா வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள, 1,500 பேருக்கு நில அளவைப் பயிற்சி அளிக்கப்பட்டு உரிமம் வழங்கப்படும்.

பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும். பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் 25 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கிராம நிர்வாக அலுவலக பராமரிப்புக்காக மாதம் 1,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும். தொழில், வணிக நிறுவனங்கள், கல்வி, மருத்துவ நோக்கங்களுக்கான அறக்கட்டளைகள் வசம் உள்ள நிலங்களுக்கு அரசின் அனுமதி கிடைப்பதற்காக, நில உச்சவரம்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த பேரிடர் மற்றும் நிகழ்நேர தகவல் சேகரிப்பு அமைப்பு 80 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும். தமிழக பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் சிறப்பு திறன் மையம் உருவாக்கப்படும். பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை பணிகளுக்கு தொழில்நுட்ப அமைப்பு 16.53 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் நிலச்சரிவு அபாய குறைப்புக்கான திட்டம் 50 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் வெள்ளத் தணிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை 3.90 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும்.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், 87 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்திற்கு பதிலாக, இன்றைய சுகாதார சவால்கள் மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப புதிய சட்டம் இயற்றப்படும். இதன் படி, வீடு மற்றும் மருத்துவமனை அல்லாத இடங்களில் சுய பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும் என்ற புதிய பிரிவு சேர்க்கப்படும். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள், ஆராய்ச்சி, மருத்துவ சுற்றுலா, ஆயுஷ் மருத்துவம் போன்றவற்றை வழங்கும் 'தமிழ்நாடு மருத்துவ நகரம்' அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மருத்துவ நிறுவனங்கள் சட்டம் இயற்ற 16.06 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், 284 உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

முதியோர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 38 லட்சம் முதியோர்களுக்கு, வருமான வரம்பின்றி இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில், 'முதல்வரின் முதியோர் காப்பீட்டு திட்டம்' செயல்படுத்தப்படும். 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 14 வகையான உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்படும். 1,090 மருந்தாளுநர்கள், 999 செவிலியர் உதவியாளர் உட்பட 3,594 பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். வீட்டிற்கே சென்று இரத்த மாதிரி சேகரிப்பு, பரிசோதனை சேவைகள் பொது-தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9, பிளஸ் 1 படிக்கும் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ, மாணவியருக்கு ரத்த சோகை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் 'இரும்பு கண்மணி திட்டம்' 6.37 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். கர்ப்பிணிகளுக்கு வீட்டில் இருந்தபடியே 'ப்ளூ டூத்' வசதியுடன் கூடிய இரத்த அழுத்தம் அளவிடும் கருவி வழங்கப்படும். மாதவிடாய் விலக்கு காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனநல பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க 'மாதவிடாய் விலக்கு ஆற்றுப்படுத்துதல் கொள்கை' செயல்படுத்தப்படும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்.

மேலும், 5,000 மருத்துவர்கள் மற்றும் 12,456 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி அளித்து, ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்படும். வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தொழுநோய் இல்லாத இலக்கை அடைய 'தொழுநோய் கண்டறிதல் இயக்கம்' செயல்படுத்தப்படும். பெற்றோர் இருவரையும் இழந்து, எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் 3,000 ரூபாயும், பெற்றோர் ஒருவரை இழந்தவர்களுக்கு 2,000 ரூபாயும் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்புகள் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version