வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு புதிய மாநில வெப்ப செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக மாவட்ட வாரியாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற வார்டு அளவிலான வெப்ப அபாய வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. இதன் மூலம், எந்தெந்த பகுதிகளில் அதிக வெப்பம் பதிவாகிறது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, மக்களைப் பாதுகாக்க தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்க, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் மூலம் வெப்ப அலை சூழல்கள் கணிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து அவசரக்கால தடுப்புப் பணிகளில் ஈடுபடும். குறிப்பாக, முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போன்ற வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.
இந்த வெப்ப பாதிப்புகளுக்கு தற்காலிகத் தீர்வுகள் மட்டுமின்றி, எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகால பசுமை தீர்வுகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் கட்டிடங்களின் வெப்பத்தைக் குறைக்கும் 'கூல் ரூஃப்' தொழில்நுட்ப முறைகள், தீவிர மரக்கன்றுகள் நடும் திட்டங்கள், பொது இடங்களில் நிழல் வசதிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து பெருக்கும் இயற்கை குளிரூட்டும் கட்டமைப்புகள் மாநிலம் முழுவதும் பரவலாக முன்னெடுக்கப்பட உள்ளன.
'கூல் ரூஃப்' தொழில்நுட்பம் மூலம் கட்டிடங்களின் வெப்பம் கணிசமாகக் குறைக்கப்படும். மேலும், மரக்கன்றுகள் நடுதல், பொது இடங்களில் நிழல் அமைத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகளும் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தமிழகம் இனி வெயிலை நினைத்து பயப்படத் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

