குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் டீசல் செலவை குறைத்து வருவாயை அதிகரிக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 136 புறநகர் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சேவைகள் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் நிறுத்தப்படும்.
தனியார் பேருந்துகள் ஏற்கனவே அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்து வரும் நிலையில், அரசு பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவார்கள்.
போக்குவரத்துத் துறை என்பது லாப நோக்கத்திற்காக அல்லாமல், சாமானிய மக்களுக்கு சேவை செய்வதற்காக நடத்தப்பட வேண்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே முக்கியம் என இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
லாப நோக்கத்திற்காக அரசு பேருந்து சேவைகளை குறைப்பது பொதுமக்களுக்கு எதிரான செயல் என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நடவடிக்கையால் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகங்கள், வருவாயை பெருக்க வேறு வழிகளை ஆராய வேண்டும் என்றும், மக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு சேவைகளை ரத்து செய்யக்கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த திடீர் நடவடிக்கையால், தினசரி பயணிகளை நம்பியிருக்கும் சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

