தமிழக பட்ஜெட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு என பல துறைகளில் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ்' திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு மற்றும் 24 மணி நேரப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இது மாணவர்களுக்குச் சுகாதாரமான கற்றல் சூழலை வழங்கும். மேலும், 'பள்ளி நிறைவுத் திட்டம்' மூலம் 3,734 பள்ளிகள் 2,132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்படும். இதற்காக நடப்பாண்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கல்வி, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விலையின்றி வழங்கப்படும். இது ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
38 மாவட்ட மைய நூலகங்கள் உட்பட அனைத்துப் பொது நூலகங்களும் டிஜிட்டல் கற்றல் மற்றும் புத்தாக்க மையங்களாக மேம்படுத்தப்படும். இது மாணவர்களின் அறிவுத் தேடலுக்குப் புதிய பரிமாணத்தை அளிக்கும். 11ஆம் வகுப்பு பயிலும் 5.32 இலட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில்களுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்காக 'வெற்றி மடிக்கணினித் திட்டம்' 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்காக 77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'TN-SUDAR' திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் (TNSHIC) அரசு-தனியார் கூட்டாண்மை முறையில் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு இலட்சம் படுக்கை வசதிகளுடன் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் அமைக்கப்படும்.
2027-28 கல்வியாண்டில் மதுரையில் 300 மாணவர் சேர்க்கையுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். வாகன மெக்கானிக்குகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள 22,500 நபர்களுக்கு மின்சார வாகனம் மற்றும் மின்கலன் பராமரிப்புப் பயிற்சி வழங்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்குக் கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 'வெற்றி திறன் பயிற்சித் திட்டம்' மூலம் நடப்பாண்டில் 12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 இலட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும். இதில் முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்குப் பணியிடப் பயிற்சி வழங்கப்படும்.
'செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சித் திட்டம்' மூலம் சென்னை IIT உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து 2031ஆம் ஆண்டுக்குள் 5 இலட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி வழங்கப்படும். விளையாட்டுத் திறன்மிக்க 8 முதல் 18 வயது மாணவர்களுக்கு உலகத்தரப் பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணிநேர விளையாட்டுப் பாடவேளை அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியிலும் அருகாமைப் பகுதிகளில் விளையாட்டு வசதிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.
'அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டம்' மூலம் மாணவர் ஒருவருக்கு அதிகபட்சம் 36 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 17 முதல் விரிவாக்கம் செய்யப்படும். திருநர்களுக்குத் திறன் பயிற்சி மற்றும் மானியத்துடன் சுயதொழில் வங்கிக் கடன் வழங்கப்படும். இந்தியாவின் முதல் பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமான 'அறிவகம்' உருவாக்கப்படும். காலிப் பணியிடங்கள் ஆண்டு தேர்வுத் திட்டம் மூலம் நிரப்பப்படும். முதல் தலைமுறை பட்டதாரி, வருமான மற்றும் சாதிச் சான்றிதழ்கள் மூன்றடுக்குச் சரிபார்ப்பு முறையில் விரைவாக வழங்கப்படும். 300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் தலங்களுக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

