பிரபல நடிகை தமன்னா, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள புகழ்பெற்ற மகா காளீஸ்வரர் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனது நெருங்கிய தோழியும், திரைப்படத் தயாரிப்பாளருமான பிரக்யா கபூருடன் அவர் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.
ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மகா காளீஸ்வரர் கோவில், சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இது தெற்கு நோக்கி அமைந்துள்ள சுயம்பு மூர்த்தியாகவும், இங்கு நடைபெறும் பஸ்ம ஆரத்தி உலகப் புகழ் பெற்றதாகவும் விளங்குகிறது. இந்த சிறப்பு வாய்ந்த கோவிலுக்குச் சென்ற தமன்னா, பஸ்ம ஆரத்தியில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டார்.
பஸ்ம ஆரத்தியில் பங்கேற்ற அனுபவம் குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், 'தெய்வீக அழைப்பு வரும்போதுதான் இந்த இடத்திற்கு வர முடியும். பஸ்ம ஆரத்தியைக் காணும் வாய்ப்பு கிடைத்தபோது, மற்ற பக்தர்களுடன் இணைந்து அந்த கூட்டு வழிபாட்டில் பங்கேற்று ஆன்மீக ஆற்றலையும் எழுச்சியையும் அனுபவித்தது ஆழ்ந்த மனநிறைவைத் தந்தது. வெறுமனே அங்கு அமர்ந்து அந்த சூழலை உள்வாங்கிக் கொள்வதே ஒரு மகத்தான பாக்கியம்' என்று தெரிவித்தார்.
தினமும் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் இக்கோவிலில், தமன்னாவின் வருகை பக்தர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த ஆன்மீக அனுபவம் அவருக்கு மிகுந்த மன அமைதியையும், புத்துணர்வையும் அளித்ததாகக் கூறப்படுகிறது.

