உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த தென்கொரிய சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாலைப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அதன் வளாகத்திலும் குரங்குகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே ஆக்ரா மாநகராட்சிக்குக் கடிதம் எழுதியிருந்தது. சுற்றுலாப் பயணிகளைத் தொந்தரவு செய்யும் இந்த விலங்குகளைப் பிடிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில்தான், தாஜ்மஹாலைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த தென்கொரியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை குரங்கு தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தாஜ்மகாலின் கிழக்கு வாயிலுக்கு வெளியே நிகழ்ந்துள்ளது.
குரங்கு கடித்ததில் அப்பெண்ணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்தது. ஆனால், சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
காயமடைந்த சுற்றுலாப் பயணி மருத்துவ உதவிக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேட்டரியால் இயங்கும் வாகனம் மூலம் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

