இலங்கையில் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட குடிநீர் தகராறில், 17 வயது பள்ளி வீரரால் தாக்கப்பட்ட 62 வயது கிரிக்கெட் பயிற்சியாளர் சுமித் பெர்னாண்டோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் கொழும்பில் நடந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் குடிநீர் கேட்பது தொடர்பாக மைதான ஊழியருக்கும் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த வீரர்கள் தண்ணீர் குழாயை அணுகியபோது, தண்ணீர் வரவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தி, ஊழியருடனான வாக்குவாதமாக மாறி, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த மோதலின் போது, சீதுவா பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் சுமித் பெர்னாண்டோவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பயிற்சியாளர், உடனடியாக கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் திங்கட்கிழமை அந்த 17 வயது பள்ளி கிரிக்கெட் வீரரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை சிறுவர் சீர்திருத்தக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மறைந்த சுமித் பெர்னாண்டோ, இலங்கை பள்ளி கிரிக்கெட் உலகில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு பயிற்சியாளர் ஆவார். இவர் மொரட்டுவாவில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியின் முன்னாள் பயிற்சியாளராகவும், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் குசல் மெண்டிஸ் உட்பட பல முன்னணி வீரர்களுக்கு அவர்களின் பள்ளிப் பருவத்தில் பயிற்சி அளித்தவராகவும் அறியப்படுகிறார். மேலும், ப்ளூம்ஃபீல்ட் கிரிக்கெட் கிளப்பின் கியூரேட்டராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
சுமித் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன. குடிநீர் கிடைக்காதது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய தகராறில், ஒரு பள்ளி வீரரின் தாக்குதலால் ஒரு மூத்த பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம், இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த நேரத்தில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

