முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது புதிய சிக்கல் எழுந்துள்ளது. அவர் அமைச்சராக இருந்தபோது, கோவை மாவட்டத்தில் 54 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நியமித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த நியமனங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஒரே நாளில் விளம்பரம் செய்யப்பட்டு, அதே நாளிலேயே நேர்காணல் நடத்தி ஆட்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நியமனங்களின்போது கடுமையான விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து, இந்த 54 பணியிடங்களுக்கான நியமனங்களை கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றமும் இந்த நியமனங்களில் சட்டவிரோதம் மற்றும் விதிமீறல்கள் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வு, இந்த 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதம் இருப்பதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் கண்டறிந்துள்ளது. எனவே, நியமிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதாக ஒருபுறம் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த உத்தரவு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு மேலும் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

