சவுரவ் கங்குலி மீது அவதூறு: போலீசில் புகார் அளித்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக பேஸ்புக் ரசிகர் பக்கம் மற்றும் விளையாட்டு ஊடகம் ஒன்றிற்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள தாகூர்புகூர் காவல் நிலையத்தில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார்.

'சவுரவ் கங்குலி ஃபேன்ஸ்' என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கம் மற்றும் 'ஸ்போர்ட்ஸ்விக்கி' என்ற விளையாட்டு இணையதளம் ஆகியவை தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு சவுரவ் கங்குலி வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக சில பேஸ்புக் பக்கங்களில் செய்திகள் பரவின. ஆனால், அது உண்மையில்லை என கங்குலி மறுத்திருந்தார்.

இது குறித்து கங்குலி தனது புகாரில், 'நான் ஒரு பொது நபர் என்பதால் என் மீதான விமர்சனங்களையும், மாற்று கருத்துக்களையும் நான் எப்போதும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பான, அவதூறான செய்திகளைப் பரப்பி எனது நற்பெயரைக் கெடுக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்கு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தனது பெயரில் போலியாகவும், அவதூறாகவும் பக்கங்களை நடத்துபவர்களைக் கண்டறிந்து தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கொல்கத்தா போலீசாரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கங்குலியின் புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் உள்ள ரசிகர் பக்கங்கள் சில சமயம் வீரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலும், பல நேரங்களில் அவை பிற வீரர்களைக் காயப்படுத்தும் விதமாகவும், நற்பெயரைக் கெடுக்கும் விதமாகவும் நச்சுத்தன்மையுடன் மாறுவது தற்போதைய விளையாட்டு கலாச்சாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கங்குலி இந்த சட்டப்பூர்வமான அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version