திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்களின் நலன் கருதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆறு மற்றும் அதன் வனப்பகுதியின் இயற்கை சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி ஆறு நாட்கள் வரை வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 09 ஆம் தேதி காலை 06:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மட்டுமே பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து கோவிலுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்ட் 07 மற்றும் 08 ஆம் தேதிகளில், கோவில் முன்னேற்பாட்டு பணிகளுக்காக அரசு மற்றும் தனியார் வாகனங்கள் எதுவும் பாபநாசம் சோதனை சாவடியில் அனுமதிக்கப்படாது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை, பக்தர்கள் பாரம்பரிய சடங்குகளைச் செய்ய கோவிலில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் மட்டுமே கோவிலுக்குச் சென்று வர முடியும். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது.
பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஆகஸ்ட் 13 ஆம் தேதி, குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 06:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை, பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு செல்வதற்காக மட்டும் பாபநாசம் திருக்கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் உழவாரப் பணிகள் காரணமாக, பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியைக் கடந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்குச் சென்று வரலாம்.
சிறப்பு ஏற்பாடுகளாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு, மண்ணெண்ணெய் மற்றும் மாசு ஏற்படுத்தும் பொருட்கள் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மது, குட்கா போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். கோவில் தவிர்த்து வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.
கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் கோவில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளன. பக்தர்கள் இந்தக் குடில்களில் மட்டுமே தங்க வேண்டும் என்றும், தனி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. வனப்பகுதிகளில் குடில்கள் அமைக்க அனுமதி இல்லை. பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல், கோவில் வளாகத்தில் உள்ள 250 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மழைக் குறைவு காரணமாக நெருப்பு பாதிப்பு அல்லது திடீர் கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதால், பக்தர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி கோவிலுக்குச் சென்று வர அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

