கொலை வழக்குகளை சந்திக்க தயார்: ஷகிப் அல் ஹசன் பேட்டி

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான ஷாகிப் அல் ஹசன், தனது பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளித்தால், தாய்நாடு திரும்பி கொலை வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்காக விளையாடும் கனவை அவர் இன்னும் கைவிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஷாகிப் அல் ஹசன், ஹசீனா அரசு ஆகஸ்ட் 2024-ல் கவிழ்க்கப்பட்டதில் இருந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வு பெறாத அவர், மீண்டும் வங்கதேச அணியில் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

எனினும், ஹசீனா அரசாங்கம் வீழ்வதற்குக் காரணமான மாணவர் போராட்டங்களின் போது நடந்த கொடூரமான ஒடுக்குமுறைகள் தொடர்பான கொலை வழக்குகளின் விசாரணை, அவர் நாடு திரும்புவதற்குப் பெரும் தடையாக உள்ளது. இதுகுறித்து ஷாகிப் கூறுகையில், 'அரசு எனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தால், நான் மகிழ்ச்சியுடன் அங்கு திரும்பிச் சென்று, விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

மேலும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை ஷாகிப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 'நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும்' என்றும் அவர் கூறினார்.

இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக, இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் அவரது முன்னிலையில்லாமலே மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் வங்கதேசம் திரும்புவதற்கு ஷாகிப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பாதுகாப்பு குறித்து உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்து அவர் நாடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால், பயணத்தின் பாதியிலேயே அவரைத் திரும்பிப் போகுமாறு கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்றார். 'வெறும் 12 மணி நேரத்தில் என்ன மாறியது என்று எனக்குத் தெரியவில்லை' என்று கூறிய அவர், இந்த பயணத்தை ஏற்பாடு செய்ய கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆனதாகவும் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் கட்சியினரிடம் இருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கைகள் எழுந்த போதிலும், ஷாகிப் அதற்குத் தயாராக இல்லை. 'அதைப்பற்றி நான் யோசிக்கக் கூட மாட்டேன்' என்றும் அவர் கூறினார்.

மேலும், தான் பெரும்பாலான லீக் போட்டிகளில் விளையாடி வருவதாகவும், உடற்தகுதியுடன் இருப்பதாகவும், விளையாட்டை ரசித்து நன்றாக ஆடி வருவதாகவும் ஷாகிப் தெரிவித்தார். 'ஆனால், என்னால் அதிக நாட்கள் காத்திருக்க முடியாது' என்றும் அவர் தனது நிலையை விளக்கினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version